Wednesday, March 20, 2019

வேலை

இளைஞர்களுக்கு
அதிக வேலைப் பளுவே பிரச்னையாக மாறியுள்ளது. நல்ல வேலை... கை நிறைய சம்பளம் கிடைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை செய்ய உடல் ஒத்துழைக்கவில்லையே என்ற கவலை இன்றைய இளைய தலைமுறையினரை தாக்கி வருகிறது. காரணம் பத்து மணிநேரத்திற்கு மேல் பார்க்கும் வேலைப்பளுதான்.

வேலைப்பளுவிற்கு பயந்து வேலையை விட முடியாது. இன்றைய கால கட்டத்தில் மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பது அத்தனை எளிதல்ல.
ஆசை ஆசையாய் வேலைக்குச் சேர்ந்த சில வருடங்களில் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதீத வேலையால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம்' (Chronic fatigue syndrome)போன்றவையும் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
நமது உடலில் சாதாரணமாக களைப்பு அல்லது சோர்வு உடலில் இருந்தால் போதிய ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும். ஆனால் தற்போது எத்தனை மணி நேரம் ஓய்வெடுத்தாலும் உடலில் சோர்வு இருந்துகொண்டே இருக்கும். இதனால் வேலையில் முழுமையான கவனத்துடன் ஈடுபட முடியாது. இதைத்தான் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம் என்கின்றனர். இந்தப் பிரச்னையை நீண்டகாலமாக உடலில் இருக்கும் களைப்பு என சுருக்கமாகச் சொல்லலாம். அவ்வளவு எளிதில் நீங்காத களைப்பு. இந்த களைப்பு ஏன் வருகிறது? இதைப் போக்க என்ன வழி என்பதை தெரிந்து கொள்வோம்.

மன அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாதவர்களுக்கும் பேட்டிக்சிண்ட்ரோம் ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முன்பெல்லாம் வெளிநாடுகளில் மட்டும்தான் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு வந்தார்கள். அதிலும் 40 முதல் 50 வயது உள்ளவர்கள்தான் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். இப்போது இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினர்தான் பேட்டிக் சிண்ட்ரோம் பிரச்னைக்கு உள்ளாகிறார்கள்.

வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு சில மாதங்கள் உடல் வலியுடன் முதுகுவலி, தொண்டைவலி, நீணநீர் நாளங்கள் பெரிதாதல் ஆகிய பிரச்னைகளும் சேர்ந்து இருக்கும். தூக்கம் சரியாக வராது. மருந்து, மாத்திரைகளுக்கும் இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்காது. இப்போது மிகுவேலையின் காரணமாக ஏற்படும் மனச்சோர்வையும் 'க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம்' என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். இந்த இரண்டும் வேறு வேறு என புரிந்து கொள்ளவேண்டும்.


வேலையால் ஏற்படும் மனஅழுத்தம் அல்லது சோர்வைச் சரிசெய்வது எளிதாகும். பேட்டிக் சிண்ட்ரத்தில் உள்ள அறிகுறிகள் மிகுவேலையால் வரும் சோர்விலும் இருக்கும். வேலை எதுவும் செய்யாத இளைஞர்களுக்கும் இத்தகைய தீராத களைப்பு தற்போது உடலில் வருகிறது. சில வருடங்கள் மூளையைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளைத் தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்யும் இளைஞர்கள் எந்த வேலையும் செய்ய முடியாதபடி ஆகிவிடுவார்கள்.
இத்தகைய இளைஞர்கள் ஒரு கட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருப்பார்கள். ஆழ்ந்த மனச்சோர்வில் வேறு நிறுவனத்தில் வேலைக்கு போகக்கூட பயப்படுவார்கள். உடலில் கழுத்துவலி, முதுகுவலி, உடல்சோர்வு போன்றவை இருக்கும். இதையும் க்ரோனிக் பேட்டிக் சிண்ட்ரோம் என சொல்பவர்கள் அதிகம். ஆனால் இதன் பெயர் `பர்ன் அவுட் சிண்ட்ரோம்' (Burnout syndrome).

அளவுக்கு மீறிய வேலைகளை பல மணி நேரங்கள் குறைந்த வருடங்களில் செய்வதால் வரும் பிரச்னை இது. மனரீதியாக புதிய யோசனைகள் தீர்ந்துபோனவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் படைப்புரீதியாக எந்த புதிய யோசனையும் இல்லாமல் போய்விடும். 11 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மென்பொருள் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும், இணையத்தைப் பயன்படுத்தி வேலை செய்பவர்களும் மிகுந்த மனச்சோர்வை அடைகிறார்கள்.

சம்பளம் அதிகம் என்பதால் பலரும் இதைப் பொருட்படுத்துவது இல்லை. இவர்கள் வேலை நேரத்தை கொஞ்சம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்று மணிநேர சினிமாவிற்கே அரைமணி நேரம் இடைவெளி விடும் போது 10 மணிநேர வேலை செய்பவர்கள் அவ்வப்போது இடைவெளி விட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாகும்.

உடல்ரீதியாக தீராத களைப்பு வருகிறது எனில் எதனால் பிரச்னை வருகிறது? என காரணத்தைக் கண்டுபிடித்து உடனடியாக அதற்கான சிகிச்சையையும் எடுத்துக் கொள்வது நல்லது. எந்தப் பிரச்னை என்றாலும் மேலதிகாரிகளிடம் பேசி உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும். உடல்ரீதியான மருத்துவப் பரிசோதனைகளையும் தகுந்த இடைவேளையில் செய்துகொள்வதும் அவசியம் என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாகும்.


இளைஞர்களுக்கு இளம் வயதில் நீரிழிவு பிரச்னையும், உயர் ரத்த அழுத்தமும் வருவதால் இரண்டையும் சரியான அளவில் உள்ளதா என்பதையும் பரிசோதனையையும் தேவையானபோது எடுத்துக் கொள்வது நல்லது. இந்தப் பிரச்னை உடையவர்கள் வேலைக்கு கொஞ்சம் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படியும் அந்த வேலை சரிவரவில்லையெனில் அதை விட்டு தங்களுக்குப் பிடித்த வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.




வேலைக்கான நேரத்தையும், குடும்பத்துக்கான நேரத்தையும் சரியாக பிரித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எட்டு மணிநேர தூக்கமும், முறையான உடற்பயிற்சியும் உடலுக்கு அவசியம். இரண்டையும் அன்றாடம் வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.
வழக்கத்துக்கு அதிகமான நேரங்கள் நிறுவனமானது வேலைவாங்கி அவர்களின் படைப்புத்திறன் அத்தனையையும் மழுங்கடித்து விடும். கற்பனை வளம் தீர்ந்து போனால் கவனச் சிதறல், உடல் சோர்வு மனச்சோர்வும் ஏற்படுகிறது. இப்படி இருப்பவர்கள் வேலைக்கு சென்றாலும் அதில் கவனத்தைச் செலுத்த முடியாமல் திண்டாடுவார்கள்.

இதுபோன்ற பாதிப்புக்கு ஆளானவர்கள் தகவல் தொடர்பில்லாத காடுகளில் அல்லது மலைவாழிடங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம். அப்படி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் இணைய தொடர்புகள் எதுவும் இல்லாத, செல்போன் பயன்படுத்த முடியாத மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம். யோகா, தியானம் என இயற்கை சூழ்நிலைகளில் சொல்லிக்கொடுக்கும் இடத்திற்கு செல்லலாம். இதன் மூலம் மனமும் அமைதியாகி, உடலுக்குப் போதுமான சக்தியும் கிடைக்கிறது. அதன்பிறகு வேலைக்குத் திரும்பினால்கூட அடுத்த ஆறு மாதம் வரை உற்சாகமாக வேலை செய்வார்கள்.

உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதும். சுத்தமான தேன் எடுத்துக்கொள்வதும் சோர்வை போக்கும். உருளைக்கிழங்கை வாரத்திற்கு இருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தரும். அப்பப்ப பேட்ரி லோ ஆகுதா? வேலையை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு உற்சாகமாக பாட்டு கேளுங்க... மனசுக்கு பிடிச்சவங்களோட பேசுங்க என்பதும் நிபுணர்களின் அறிவுரையாகும

இந்தியாவில், வேலையின்போது ஏற்படும் மன உளைச்சல், கடும் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக பக்கவாதத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2015ம் ஆண்டுக்குள் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு பக்கவாதம் ஏற்படுவது30 சதவீதம் அதிகரிக்கும். இவர்களின் எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்றும் அது தெரிவிக்கிறது.

இது மட்டுமல்லாமல்,இந்தியாவில் தற்போது 40 வயதுக்குட்பட்டோருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவது கிட்டத்தட்ட 15 முதல் 30 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

காதல்

 உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. 
 உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை என்னிடம் ஆலோசனைக்காக அழைத்து வந்திருந்தார்கள். என் முன்னால் தலைகுனிந்தபடி அமர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம், “உன் பெயர் என்னம்மா?” என்று கேட்டேன். “நதியா” என்று ஒற்றைச் சொல்லில் பதில் வந்தது. “உனக்கு என்னம்மா கஷ்டம்?” என்று கேட்டதுதான் தாமதம், கண்களில் பொலபொலவென்று கண்ணீர். பொங்கிப் பொங்கி அழுதார்.
“என்ன பண்றதுன்னே புரியலை டாக்டர். ஸ்கூல்ல யாரோ ஒரு பையனை விரும்புகிறாளாம். அவனை லவ் பண்றீயாடின்னு கேட்டா, இல்லைன்னு சொல்றா. ஆனா அவனை மறக்க முடியலை, ஒரு நாள் அவன் ஸ்கூலுக்கு வரலைன்னாலும் மனசு அடிச்சுக்குதுன்னு சொல்றா. என்ன வேணும்னுகூட இவளுக்குச் சொல்லத் தெரியலை” என்று தவிப்புடன் சொன்னார் அந்தப் பெண்ணின் அம்மா. அவருடைய அம்மா கேட்ட அதே கேள்வியைத்தான் நானும் நதியாவிடம் கேட்டேன். அந்தப் பையனை காதலிக்கிறியாம்மா?”
“ம்... இல்லை, தெரியலை”
“அந்தப் பையன்கிட்டே இருந்து உனக்கு என்ன வேணும்?”
“தெரியலை டாக்டர். ஆனா அவன்கூட பேசணும். அவன்கூட இருக்கணும். என்கிட்டே எப்பவும் அவன் அன்பா பேசிக்கிட்டே இருக்கணும்னு தோணுது. இது காதாலான்னு தெரியலை. கல்யாணம் பத்தி எல்லாம் யோசிக்கக்கூட தோணலை. அம்மா, அப்பா ரெண்டு பேருமே என்னை எதுவும் சொல்லலை. எல்லாம் போகப் போக சரியாகிடும்னுதான் சொன்னாங்க. எனக்குத்தான் மனசே சரியில்லை. அழுகை அழுகையா வருது. ஆனா அவனை ரொம்பப் பிடிக்குது” - அழுகையும் இடையிடையே கொஞ்சம் சிரிப்புமாகச் சொல்லி முடித்தார் நதியா.
அந்த மாணவனை விசாரித்தபோது, “நாங்கள் சாதாரணமாகத்தான் பழகுகிறோம்” என்று சொல்லியிருக்கிறார். அந்த மாணவர் தெளிவாக இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் அவரையே நினைத்துப் புலம்பும் நதியாவுக்கு என்னவாயிற்று?
அடுத்து சுரேஷின் கதை. டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். என்னைப் பார்க்க வந்த அன்றும் குடித்திருந்தார். “அவளால மட்டும்தான் என்னைச் சரிசெய்ய முடியும்” என்று எடுத்த எடுப்பிலேயே உணர்ச்சிவசப்பட்டார்.
“மூணு வருஷமா நானும் அவளும் காதலிக்கிறோம் சார். ரொம்ப நல்ல பொண்ணு சார். நல்லா படிப்பா. ஆனா நான்தான் ஏதாவது பண்ணிடறேன். சின்னதா சண்டை வந்தாலும் குடிக்கத் தோணுது. குடிச்சிட்டு கலாட்டா பண்ணிடறேன். நேத்துகூட அப்பாவையே அடிச்சிட்டேன். ஆனா போதை தெளிஞ்ச பிறகுதான் நான் பண்ண தப்போட வீரியம் புரியுது. அதுக்காக என்னை நானே தண்டிச்சிக்கிறேன். இதோ பாருங்க” என்றபடி தன் இடது கையைக் காட்டினார்.
அங்கே வரிசையாக நான்கு கோடுகள் பிளேடால் இழுத்து, தன்னைத் தானே வருத்திக்கொண்டிருக்கிறார். பாதிக் காயம் ஆறியும், மீதி ரணமாகவும் இருந்தது அவரது மனதைப் போலவே. “நீங்க தயவுசெய்து அவகிட்டே பேசுங்க சார்” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்டவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. இன்னும் முழுதாக போதைக்கு ஆட்படவில்லை போல. தெளிவாகவே பேசினார்.
அவர் சொன்ன பெண்ணைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். விவசாயப் படிப்பு படிக்கிறாராம்.
“எந்தப் பிரச்சினையும் இல்லை டாக்டர். மூணு வருஷமா காதலிக்கிறோம். ரெண்டு பேர் வீட்லயும் எந்த எதிர்ப்பும் இல்லை. எல்லாத்துக்கும் காரணம் அவரும் அவரோட குடிப் பழக்கமும்தான். அவருக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கு. அடிக்கடி என் செல்போனை வாங்கிப் பார்ப்பார். நானும் யதேச்சையாகப் பார்ப்பதாகத்தான் நினைத்தேன். ஆனால் நான் யார் யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்ப்பார். யாருடனாவது ‘சாட்’ செய்திருந்தால் கோபப்படுவார். நள்ளிரவில் போன் செய்து ‘வாட்ஸ் அப்’பில் இவ்ளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கறேன்னு கேட்பார்.
இதெல்லாம் ஒரு பக்கம்னா, இவர் குடிக்கறதுக்கே நான்தான் காரணம்னு சொல்றார். ஆனா இதுவரை என்னைச் சந்தேகப்பட்டு நேரடியா எதுவும் கேட்கலையே தவிர, மறைமுகமா நிறைய கேட்டிருக்கார். என் மேல ரொம்ப பொசஸ்ஸிவ்வா இருக்கார்னு மட்டும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா அது என்னைக் கஷ்டப்படுத்துற அன்பா இருக்கக் கூடாது இல்லையா?” என்று கேட்டார் அந்த மாணவி.
இருவரிடமும் அன்பு நிறைந்திருக்கிறது. பிறகு என்ன சிக்கல்? சுரேஷிடம் என்ன பிரச்சினை? காதலில் ஏற்படும் உணர்வுக் குழப்பமா? இல்லை குடிப்பதால் ஏற்படுகிற சந்தேக நோயா? அவரது மன நிலையா? மதுவா? காதலிக்க வேண்டியதுதான். அது ஒரு மகோன்னதமான அனுபவம்தான். ஆனால் எத்தனை காதல்கள் அழகாக எடுத்துச் செல்லப்பட்டு கல்யாணத்தில் கைகூடி, அதற்குப் பிறகும் தொடர்கின்றன? எல்லாக் காதலர்களும் சந்தோஷ வானில் சிறகடித்துப் பறக்கிறார்களா? ஹார்மோன்களின் ருத்ர தாண்டவம் மட்டும்தான் காதலா?
நான் இங்கே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் தாங்கள் காதல் வயப்பட்டிருக்கிறோமா என்ற குழப்பம் இருக்கிறதே ஏன்? பிடிக்காத பெண்ணைப் பின் தொடர்வதும், தன்னைக் காதலித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், மறுத்தால் எத்தகைய வன்முறையையும் கையில் எடுப்பதும் காதலில் சேருமா? காதலித்தாலே புத்தி பிசகிவிடுமா என்ன? விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலக்கிற காதலின் உணர்வுப் பிழைகளை உளவியல் கண்ணாடி அணிந்து அலசுவோம் வாருங்கள்.

நன்றி
மோகனா (மன நல மருத்துவர்)
சேலம்





பயம்

பயத்தின் முக்கியக் காரணம்.....

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத, புரியாத நிலையே! சுருக்கமாகச் சொன்னால், பயம் என்பது எதிர்காலத்தை நினைத்துத்தான். எதிர்காலம் என்பது இங்கே அடுத்த நொடி, அடுத்த நிமிடம், அடுத்த நாள், அடுத்தடுத்த வருடங்கள் என அனைத்துக்குமே பொருத்தும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க, உங்கள் எண்ணங்களோ எதிர்காலத்தில் இருக்கின்றது, அவ்வளவே!

ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணம் உதித்துவிட்டாலே, பயம் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது. இந்த உணர்வு பயம் என்று பொதுமைப்படுத்தப்பட்டாலும் கவலை, அச்சம், பதற்றம், மன அழுத்தம், படபடப்பு என்று வெவ்வேறு வகைகளாக இது வெளிப்படுகிறது. மொத்தத்தில், பயம் என்பது முழுக்க முழுக்க நம் மன ஓட்டம் மட்டுமே. அது வெறும் விபரீதக் கற்பனையால் விளைவது. ஆபத்து என்பது கட்டாயமாக இருப்பது என்று எடுத்துக்கொண்டாலும், அங்கே பயம் என்பது, எப்போதும் தவிர்க்கக்கூடிய ஓர் உணர்வு மட்டுமே.
மருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. இந்த ஆராய்ச்சியில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவர், 2000-மாவது ஆண்டில், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். எரிக் கண்டெல்.

பயம் உருவாகும் அந்த நொடி…

பயம் என்ற அந்த ஒற்றை உணர்வைத் தலைதூக்க வைக்க, நம் உடல் என்ன செய்கிறது? அது உருவாகும்போது, நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன?
ஓடி ஒளிதல் (hiding), செயல் முடக்கம் (freezing), நடுக்கம் (shivering), அழுகை (crying) எனப் பயம் பல வகைகளில் வெளிப்பட்டாலும், செயல் முடக்கம் என்பது மட்டுமே பெரும்பாலும் நடக்கும். பயம் ஏற்படுத்தும் ஒரு காட்சியோ, கற்பனையோ, தோன்றிவிட்டால், செயல் முடக்கம் இயல்பாக வந்துவிடுகிறது. இதற்குக் காரணம், நம் பெருமூளை புறணி (Cerebral Cortex). சிந்தனை மற்றும் செயலுக்குக் காரணமான மூளையின் இந்தப் பாகம், எப்போதும் நம் பாதுகாப்புகுறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய பள்ளத்தைத் தாண்டுவதற்கு கூட, அதனிடம் அனுமதி பெறவேண்டும். தாண்டிவிட முடியுமா என்று நீங்கள் மனதுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, இந்தப் புறணி கேட்கும் கேள்விதான். இதற்கு ஆதரவாகச் செயல்படுவது மூளையின் மற்றொரு பகுதியான அமிக்டாலா (amygdala). இதுதான் நம் உணர்ச்சிகளின் ஒருங்கிணைப்பு மையம்
ஓர் இருட்டான ஒற்றையடிப் பாதையை நீங்கள் தனியாக கடக்கும்போது, “இது பாதுகாப்பான வழி தானா?”, “எந்தப் பிரச்னையும் இல்லாமல் இதைக் கடந்துவிட முடியுமா?”, “இருட்டில் கண் ஒழுங்காகத் தெரியுமா?” என்று நமக்குள் பல கேள்விகளை இந்தப் புறணி எழுப்பும். அந்தக் கேள்விகளில் ஏதோ ஒன்றிற்கு விடை இல்லையென்றாலும், உங்கள் இதயம் வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்கத் தொடங்கும். அண்ணீர் எனப்படும் அட்ரினலின் (Adrenaline) உடலில் வேகமாக சுரக்கத் தொடங்கும். இது எல்லாம் உங்களை அந்தப் பாதையில் செல்ல விடாமல் தடுக்க உங்கள் மூளை நடத்தும் நாடகங்கள். அதையும் மீறி நீங்கள் அந்த இருட்டான பாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினால், கை, கால்களில் நடுக்கம் ஏற்படத் தொடங்கும். அதையும் பொருட்படுத்தாமல் நீங்கள் தொடர்ந்தால், இப்போது மூச்சு விடுவதுகூட சிரமமாகத் தோன்றும். இருட்டில் ஏதோ ஓர் உருவம், வித்தியாசமான ஒலி, அல்லது ஒருவித சலசலப்பு ஏற்படுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தும். நீங்கள் ஓடி விடலாமா என்று எத்தனிக்க, உங்கள் தோலிலுள்ள ‘pores’ எனப்படும் சிறுதுளைகள் திறந்து பயம் என்ற உணர்வை உடல் முழுவதும் பரப்பி, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. பேய், பிசாசு என்று பயம் ஏற்படுவதும் இதுபோன்ற ஒரு சமயத்தில் தான். இந்தப் பேய் பயம் தான் நம் பெருமூளை புறணியின் டிரம்ப் கார்டு! அந்த எண்ணம் உதித்தவுடன் அந்த இருட்டில் நடந்து போக முடியாமல் பின்வாங்க வேண்டியதுதான்.


பயமில்லாத மனிதர்கள் உண்டா?

பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்ற இந்த உணர்வு, உலகிலேயே அரிதிலும் அரிதாக வெறும் 400 பேர்களுக்கு இல்லையெனக் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் ஒருவித அரிதான மரபணுக் கோளாறு. அதன் பெயர் Urbach–Wiethe Disease. சமீபத்தில், அமெரிக்காவில் SM என்ற குறியீடுடன் அழைக்கப்படும் ஒரு பெண்ணை குறித்து ஒரு செய்தி வந்தது. இவரின் அமிக்டாலா (amygdala) சேதமடைந்துவிட்டதால், இவரால் பயம் என்ற ஓர் உணர்வை உடல் முழுவதும் கடத்தவே முடியவில்லை. துப்பாக்கி, கத்தி என எந்த ஆயுதத்தை வைத்து மிரட்டிய போதும், உயிருக்கு ஆபத்தான பல சம்பவங்கள் அரங்கேறிய போதும், இவருக்குப் பயம் என்பதே ஏற்படவில்லை. அவரின் கணவர், அவரைக் கொடுமைப்படுத்தி சாவின் விளிம்புவரை சென்றபோது கூட, இவர் அசைந்து கொடுக்கவேயில்லை. சில சமயம், மூளையிலுள்ள திசுக்கள் அதிக வலுவடைவதால்கூட இந்தக் கோளாறு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்


சரி, இப்படி பயமில்லாமல் இருப்பவர்கள் சூப்பர்ஹீரோக்கள் போன்று கொண்டாடப்பட வேண்டியவர்கள் தானே? பின்பு ஏன், இதை ஒரு நோயாக, ஒரு குறைபாடாக பார்க்கிறோம்? காரணம், பயம் என்ற உணர்வு, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா வகை உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமானது. அதுதான்  நம்மை ஆபத்தை நோக்கி நகரவிடாமல் காக்கிறது. தொடர்ந்து வாழவைக்கிறது. எனவே, பயம் மிகவும் அவசியமானது. அதீத பயமும், ஃபோபியாக்களும் தான் பிரச்னையே!
எது எப்படியோ, கட்டுரையை ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிடுவோம். பேட்மேன் என்ற கற்பனை சூப்பர்ஹீரோ இரவில் நகரைக் காப்பவன். பேட் எனப்படும் வௌவால் உருவத்தை இவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன தெரியுமா? சிறு வயதிலிருந்தே இவனுக்கு வௌவால் என்றால் மிகவும் பயம், அதிலிருந்து விடுபட இவன் தன்னை வௌவாலாகவே மாற்றிக்கொள்கிறான். ஊரையே காக்கிறான். அப்படி நம் பயம் என்னவென்று கண்டறிந்து அதைக் கடந்து செல்ல முயற்சி செய்வோம்!

நன்றி......

R. சீனிவாசன் 


Tuesday, March 19, 2019

மனமே அமைதிகொள்

வாழ்க்கை என்பது என்ன...

 சவால்கள், சலனங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பவாதங்கள், ஏமாற்றங்கள், ஏற்றம், தாழ்வு, மோசடி, வருத்தம், சோகம், சந்தோஷம் இப்படி ஒவ்வொரு அம்சமும் ஒன்றாகக் கலந்த ஒரு கூட்டுக் கலவை. ஒவ்வொரு தருணத்திலும் ஒரு அம்சம் வெளிப்பட்டு வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும். அந்தந்த அம்சத்திற்கேற்ப சாமர்த்தியமாக நடந்து அதை சமாளித்து வெல்வதில்தான் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்துக் கொள்வது அடங்கியுள்ளது.



காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை எத்தனை டென்ஷன், பதட்டம், படபடப்பு, அவதி, அவஸ்தை.. வேலைக்குப் போவோருக்கு ஒரு டென்ஷன் என்றால், வீட்டில் உள்ளோருக்கு ஒரு வகையான டென்ஷன்.
நினைவுகளின் அழுத்தம் தரும் பதட்டம், காதல் தரும் பதட்டம், கணவர்களால் ஏற்படும் பதட்டம், மனைவியரால் ஏற்படும் பதட்டம், ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வரும் பதட்டம் என பதட்டங்கள் பலவிதம். ஆனால் இதில் அப்படியே மூழ்கிப் போய் விட்டால் என்னாகும்.. மனம் நொறுங்கும், வாழ்க்கை சிதறிப் போகும். அதிலிருந்து மீள என்ன செய்யலாம்...?

இப்படிப்பட்ட மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஓரம் கட்ட தியானம் சிறந்த வழி என்கிறர்கள் நிபுணர்கள். இது மனதையும், உடலையும் ஒரு சேர நார்மலாக்குகிறது, ரிலாக்ஸ் செய்கிறதாம். சிந்தனைகளை சீர்படுத்தி, தேவையற்ற சிந்தனைகளை அமுங்கிப் போகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தலை தூக்கவும் இவை உதவுகிறதாம்.
மனதைப் போட்டு அரிக்கும் சிந்தனைகளை தடுத்து நிறுத்தி, இங்கே பார், நீ இவனுக்குத் தேவையில்லை, இவனை நிம்மதியாக இருக்க விடு, இவனை விட்டுப் போய் விடு என்று தடுத்து நிறுத்தும் கவசமாக தியானம் இருக்கிறதாம்.
சிந்தனைகள் சீர்பட்டாலே மனசு அமைதியாகி விடும் அல்லவா... அதுதான் தியானத்தின் முக்கிய அம்சமாகும்.
சரி எப்படி தியானம் செய்யலாம்...?
மூச்சுப் பயிற்சி - முதலில் நல்ல வசதியான, சவுகரியமான இடத்தைத் தேர்வு செய்து அமர வேண்டும். கண்களை மூடிக் கொள்ள வேண்டும். உடலை லேசாக வைத்துக் கொள்ள வேண்டும், இறுக்கம் கூடவே கூடாது, அப்படியே காற்று போல உடல் இருக்க வேண்டும். மூச்சை நிதானமாக இழுத்து விட வேண்டும்.
ஆழமாக மூச்சு விடுங்கள், அதேபோல அமைதியாக அதை வெளியே விடுங்கள். கவனச் சிதறலைத் தடுக்க ஒவ்வொரு முறை மூச்சை இழுத்து விடும்போது அதை மனதுக்குள் எண்ணிக் கொண்டு வரலாம். இதை ஒரு பத்து அல்லது 20 நிமிடம் வரை செய்யுங்கள்.
இது ஒருவகை தியானம். இதேபோல மேலும் சில முறைகள் உள்ளன. அதையும் பார்க்கலாம் வாருங்கள்.
குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்தலாம் - அதாவது ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது முழுக் கவனத்தையும் செலுத்தி தியானம் செய்யலாம். அதாவது ஒரு வடிவம், வண்ண வித்தியாசம், தட்பவெப்பம், அசைவு ஆகியவற்றைச் சொல்லலாம்.
பெரும்பாலும் இதுபோன்ற தியானத்திற்கு பூக்கள், மெழுகுவர்த்தியின் ஜூவாலை போன்றவற்றை பயன்படுத்தலாம். அலாரம் கிளாக், மேசை விளக்கு, காபி மக் ஆகியவற்றைக் கூட சிலர் இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். அதில் தப்பில்லை, நமக்குத் தேவை, கவனக்குவிப்புக்கு ஒரு பொருள்.

ஒலி மீது கவனம் செலுத்தலாம் - இதுவும் ஒரு வகை. அதாவது ஏதாவது ஒரு சத்தம் மீது நமது முழு மனதையும் செலுத்துவது. மனசு முழுமையாக அதில் ஈடுபட்டு ஒன்றிப் போய் விட வேண்டும். அதற்குத் தேவையான ஒரு ஒலியை நாம் தேர்வு செய்து கவனம் செலுத்தலாம். பெரும்பாலும் ஓம் என்ற ஓம்காரத்தை பலர் இதற்கு தேர்வு செய்வார்கள். இதுதான் என்றில்லை, வேறு ஏதாவது நல்ல ஒலியையும் கூட இதற்காக பயன்படுத்தலாம்.


ஒலியைத் தேர்வு செய்து தியானத்தில் அமரும்போது மனசு முழுவதையும் அந்த சத்தத்தின் மீது போட்டு விடுங்கள், மனசை முழுமையாக இலகுவாக்கிக் கொண்டு இதைச் செய்யுங்கள்.
கற்பனைப் பொருட்கள் - இதையும் செய்யலாம். இது இன்னும் அருமையான ரிசல்ட்டைக் கொடுக்குமாம். அதாவது உங்களது மனதுக்குப் பிடித்த ஒரு கற்பனை விஷயத்தை நீங்கள் மனதுக்குள் வரித்துக் கொண்டு அதன் மீது முழு கவனத்தையும் செலுத்துவது. இது மனதுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் உபயோகமாக இருக்குமாம். மனதை சந்தோஷமாக்கவும், லேசாக்கவும் இது உதவும்.
எதையும் நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்.. உங்களது மனதை சந்தோஷப்படுத்தக் கூடிய எதையும் நீங்கள் கற்பனை செய்யலாம்...ஏன் அழகான தேவதைகளைக் கூட நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டு உங்களது மனதை லேசாக்க முயற்சிக்கலாம்.

மனசு நிம்மதியாக, சாந்தியாக, சாந்தமாக, சமர்த்தாக இருந்தால்தான் வாழ்க்கையில் தவறுகள் குறையும், செய்யும் செயல்களில் நிதானம் கூடும். செய்து பாருங்கள்!

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க மடியுமா ?



காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!


வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.
அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்.
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள்.
அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்....


புரிதலை விட தெளிதலே
எப்பவும் முக்கியம்....!!
ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்.அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.
அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி, ” அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு? ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே.
டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க ” என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர்.” எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனா, போயிட்டு கேட்டு வ்ருவது நன்றாகவே இருக்கு” என்றார்.
கோபமடைந்த மனைவி, ” முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க” என்றார்.
அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார். மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது.
உடனே மனைவி,” தினமும் லேட்டா வரீங்க. கேட்டா, உபன்யாசத்துக்குப் போனேன் எங்கறீங்க என்ன சொன்னாங்கன்னு கேட்டா, ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க.
நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்..எதுக்கும் பிரயோஜனம் கிடையாது”, என்று கொட்டித் தீர்த்தாள்.
அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது…
“நீ சொல்லறது சரிதான். சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்.
ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு.
அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்.
ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது”, ன்னு சொன்னார்....!!!

கல்லாய் நின்றான் இறைவன்....!!
வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள மானுக்கோ வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத் தோகையில்லை,
தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை.
காற்றுக்கு உருவமில்லை கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை, நெருப்புக்கு ஈரமில்லை.
ஒன்றைக் கொடுத்து ..ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான்
எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும்
கல்லாய் நின்றான் இறைவன்.
எவர் வாழ்விலும் நிறைவில்லை,
எவர் வாழ்விலும் குறைவில்லை,
புரிந்துகொள் மனிதனே அமைதி கொள் !!!!

கடுஞ்சொல்
‘ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?’
எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது!
எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!
மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!
அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!
ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?
அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!
காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும்
அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!
துறவி தொடர்ந்து கூறுகிறார்…..
இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?
அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது!
அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!
இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!
அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!
துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்……..
அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது, உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!
அப்படி செய்யாமல் போனால், ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவி
டும் நிலை வந்துவிடும்.
எனவே கடுஞ்சொல் பேசுவதை
தவிர்ப்போம்.....!!!

எது சிறந்தது?
1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .
2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .
4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்..

செல்போன் அரக்கன்

செல்போன் அரக்கன்

செல்போன்கள் காதல் உறவுகளை உடைத்து, மனிதர்களை அதிக மன அழுத்திற்கு ஆளாக்குவதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.


தொலைதூரத்தில் இருப்பவர்களை விரைவாகத் தொடர்பு கொள்வதற்காக கண்டுபிடிக்கப் பட்டது தான் தொலைபேசி. அதனை வீட்டிற்குள் ஒரு மூலையில் வைத்து அதன் அருகிலேயே அமர்ந்திருக்காமல், நமது வசதி போல் எங்கும் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது தான் செல்போன்.
உலகத்தையே கைக்குள் அடக்கும் பெருமை செல்போனிற்கு உண்டு. ஆனால், செல்போன்களால் நன்மைகளைப் போலவே தீமைகளும் உண்டு. அது மனித உறவுகளை உடைத்து மன அழுத்தத்தை அதிகரிப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


வயது வித்தியாசமில்லாமல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செல்போன் அடிமைகளாக மாறி வருகின்றனர். அருகருகில் நின்றால் கூட, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போனை இயக்கிக் கொண்டே வாழ்கின்றனர்.

இதனால், உறவுகளுக்கிடையே விரிசல் அதிகமாகி வருவதாக அமெரிக்காவில் உள்ள பைலர் பல்கலைக்கழகத்தின் ஹன்காமர் தொழிற்பள்ளி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டது.


இந்த ஆய்வில் அமெரிக்காவைச் சேர்ந்த 453 பேர் கலந்து கொண்டனர். இதில், செல்போன்களால் உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுவதாகவும், இதனால் வாழ்க்கையில் திருப்தியில்லாமல் மனிதர்கள் அல்லாடுவதாகவும் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் கணவரும், மனைவியும் சேர்ந்திருக்கும் தருணங்களில் கூட அவர்களில் யாராவது ஒருவர் தன் செல்போனை ஆராய்ந்து கொண்டே பேசுவதாகவும், இதனால் தங்களது பேச்சுக்கு மதிப்பிருப்பதில்லை என்றும் ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வில் 70.6 சதவீதம் பேர் செல்போன்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டைவிட30.2 சதவிகிதம் அதிகம்.




வேலை

இளைஞர்களுக்கு அதிக வேலைப் பளுவே பிரச்னையாக மாறியுள்ளது. நல்ல வேலை... கை நிறைய சம்பளம் கிடைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலை ...